தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிக அளவிலான வெப்பம் காணப்படும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், அதன் 3 வது நாளான இன்று, வழக்கத்தை விட மிக அதிக அளவிலான வெப்பம் காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும் என்று, வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் நிதானமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று 5 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால், அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.