திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட ஒருதலக்காதலால், இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த விக்டர் ஜான், 25 வயதான சலோமியா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

விக்டர்ஜான், ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மனைவி சலோமியா வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, சலோமியா தினமும் தனியார் பேருந்தில் அலுவலகம் சென்று வந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கும் அந்த பேருந்தின் கிளீனர் 25 வயதான சுந்தரமூர்த்தி என்பவருக்கும் இடையே அறிமுகம் ஆகி நட்பான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சலோமியாவின் பேச்சில் கிரங்கிப்பொன சுந்தரமூர்த்தி, அவரை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கி உள்ளார். சம்பத்தன்று, தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் கூறி உள்ளார்.

அப்போது, தனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், இதனால், காதலை ஏற்க முடியாது என்றும், அந்த பெண் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, அந்த இளம் பெண்ணை கொலை செய்யத் திட்டமிட்டார்.

இந்நிலையில், வழக்கம் போல் அந்த பெண் பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை வழிமறித்த சுந்தரமூர்த்தி, திடீரென்று அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார்.

இதில், தீ பற்றி எரிந்த நிலையில், அந்த பெண் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து, அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இளம் பெண்ணின் மீது தீ வைத்த சுந்தரமூர்த்தியை, அங்கு இருந்தவர்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட ஒருதலைக்காதல், இளம் பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.