கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர் ஒருவர், “நாடோடிகள்” சினிமா பாணியில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழபுங்குடி வலையதாரனிபட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், துபாயில் வேலை செய்துகொண்டிருந்தார்.

இதனிடையே, அந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால். இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம், சிறுமியின் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

இதனையடுத்து, வரும் 29 ஆம் தேதி சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைவதால், அடுத்த நாளே அந்த சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்த தகவல் துபாயில் பணியாற்றி வந்த இளைஞருக்குத் தெரியவந்தது.

இதனிடையே, இன்னும் 3 மாதங்களில் இந்தியா திரும்பவேண்டிய அந்த இளைஞர், கடந்த 20 ஆம் தேதி அவசர அவசரமாக இந்தியா திரும்பி உள்ளார்.

இந்தியா திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா .இருக்கிறதா என்று கண்டறியப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவரை மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு அனுமதித்தனர்.

இதனால், காதலி கைவிட்டுப் போய் விடுவாளோ என்று பயந்த அந்த இளைஞர், “நாடோடிகள்” சினிமா பாணியில், பெண் வீட்டிலிருந்து பெண்ணை தூக்கி வர ஒரு நண்பர்கள் குழுவும், திருமணம் ஏற்பாடுகள் செய்ய ஒரு நண்பர்கள் குழுவும், தன்னை இந்த கொரோனா முகாமிலிருந்து மீட்டுச் செல்ல ஒரு நண்பர்கள் குழுவும் என்று ஆயத்தப்படுத்தி உள்ளார்.

அதன்படி, கொரோனா முகத்திலிருந்து தப்பிய அந்த இளைஞர், தன் நண்பர்களுடன் வந்த அந்த சிறுமியை, நேற்று இரவு அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே, கொரோனா முகாமிலிருந்து அவர் தப்பியதால், போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். அப்போது, அவர் செல்போன் உதவியுடன் அவர் இருக்கும் இடத்தை அறிந்துகொண்ட போலீசார், சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட கையுடன், அவரை கைது செய்து, மீண்டும் கொரோனா முகாமில் கொண்டு வந்து அனுமதித்தனர்.

மேலும், அந்த இளைஞருடன் பழகிய அந்த சிறுமியை மீட்ட போலீசார், சிவகங்கையில் உள்ள காப்பகம் ஒன்றில் தனியாக வைத்து கண்காணித்து வருகின்றனர் இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.