மனைவி அழகாக இல்லாததாதல், கணவன் ஹெல்மெட்டால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு விஜயநகர் அடுத்த மாரேனஹள்ளியை சேர்ந்த 36 வயதான சசிக்குமார், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், சசிக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சசிகுமார் மனைவியிடம் வந்து, “நீ அழகாக இல்லை. உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன்” என்று கூறி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, கணவரிடம் “திருமணமாகி 6 மாதம் தான் ஆச்சி. இப்போ வந்து இப்படி சொல்றீங்களே” என்று கூறி, விவாகரத்து தர மறுத்துவிட்டார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒருகட்டத்தில் சசிகுமாரின் நடவடிக்கையால் வெறுத்துப்போன விஜயலட்சுமி, கணவருடன் சண்டைபோட்டுவிட்டு, அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

பின்னர், விஜயலட்சுமியின் பெற்றோர் சசிகுமாரை சாமதானம் செய்து, மகள் விஜயலட்சுமியை சசிகுமாருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் விவகாரத்து கேட்டு சசிகுமார் தொந்தரவு செய்துள்ளார். இதனால், இருவருக்குள்ளும் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

இதில், ஆத்திரமடைந்த சசிகுமார், மனைவியை அடித்து உதைத்துத் தாக்கி உள்ளார். மேலும், அவரை ஹெல்மெட்டால் கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால், படுகாயங்களுடன் விஜயலட்சுமி அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விஜயலட்சுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சசிகுமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மனைவி அழகாக இல்லை என்று கூறி, கணவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.