இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய
தலைவராக இன்று பதவியேற்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கடந்த 14 ஆம் தேதி பி.சி.சி.ஐ.யின் நிர்வாகிகள் பதவிக்கான வேட்பு மனுக்களைப் பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பி.சி.சி.ஐ.யின் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனால், பி.சி.சி.ஐ.யின் 39 வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் அதற்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட கங்குலி, இன்று முறைப்படி பதவி ஏற்றார்.

இந்த விழாவில், பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர்கள், இந்திய அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பி.சி.சி.ஐ.யை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.