சென்னையில் மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னை டி.பி.சந்திரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருடைய மகள், தாயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மகளைப் பார்ப்பதற்காக, தந்தை சரவணன், மனைவி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, அவருடைய மனைவி இல்லாத நிலையில், மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, மகள் தனியாக இருப்பதைப் பார்த்து சபலப்பட்ட சரவணன், மகள் என்றும் பார்க்காமல், பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால், அந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.

பின்னர், தாயார் வீடு திரும்பியதும், இருவரும் சேர்ந்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், மாணவியின் தந்தையைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், டி.பி.சந்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.