மகனின் காதலியைக் கடத்தி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் செம்போடை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான கருப்பு நித்யானந்தம், துணிக் கடை வியாபாரம் செய்து வந்தார். கூடவே, அமமுக கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இவருடைய மகன் 20 வயதான முகேஷ்கண்ணன், அங்குள்ள ஐ.டி.ஐ.யில் படிக்கும்போதே, கூடவே படித்த பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்த வந்த நிலையில், இருவரும் படித்து முடித்து, சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறையில் முகேஷ்கண்ணன் ஊருக்கு வந்துள்ளார். அப்போது, மகன் முகேஷ்கண்ணனின் காதல் விவகாரம் தந்தை கருப்பு நித்யானந்ததிற்கு தெரியவந்துள்ளது. இதனால், கோபமடைந்த அவர், நூதன முறையில் அவர்களது காதலைப் பிரிக்கத் திட்டமிட்டார்.

அதன்படி, தனது மகனின் காதலி வீட்டுக்குச் சென்ற கருப்பு நித்யானந்தம், மகனின் காதலியைத் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, “தன்னுடன் வந்தால், என் மகனுடன் உனக்குத் திருமணம் செய்து வைப்பதாக” பொய் சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பெண்ணும், “காதலனின் அப்பா தானே அழைக்கிறார்” என்று நம்பி சென்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணை, காரில் கடத்திச் சென்று, அங்குள்ள செம்போடை பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து, அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தி தாலி கட்டி உள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை அடித்து கடுமையாகத் துன்புறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அங்குள்ள அவரிக்காடு கிராமத்தில் உள்ள தெரிந்த ஒருவரின் வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் ரீதியாகச் சித்ரவதை செய்துள்ளார்.

அங்கிருந்து எப்படியோ தப்பி வந்த அந்த பெண், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதைகள் குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கருப்பு நித்யானந்தத்தை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி பவுன்ராஜ வள்ளி ஆகியோரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து, 3 பேரையும் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 3 பேரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மகனின் காதலியைக் கடத்தி, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.