சி.ஆர்.பி.எப். வீரர்கள் இடையே பயங்கர மோதல்! 7 குண்டுகளை உடலில் வாங்கி வீரர் பலி..
By Aruvi | Galatta | 12:01 PM
சென்னை ஆவடியில் ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியர், சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை (HVF), மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் 48 வயதான கிரிஜேஷ் குமார் ஈடுபட்டிருந்தார்.
அவரை விடுவிப்பதற்காகத் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 49 வயதான நிலம்பா சின்ஹா என்ற வீரர் வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், கடும் கோபம் அடைந்த நிலம்பா சின்ஹா, தன்னுடைய துப்பாக்கியால் கிரிஜேஷ் குமார் மீது சரமாரியாக 7 முறை சுட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரித்த கிரிஜேஷ் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிரிஜேஷ் குமாரின் தலையில் மட்டும் சுமார் 6 குண்டுகள் பாய்ந்துள்ளன. மேலும், அவரின் கழுத்தில் ஒரு குண்டு பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு வந்த கர்ணல் செரியன், துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, சரண்டர் ஆகுமாறு நிலம்பா சின்ஹாகாவுக்கு உத்தரவிட்டார். இல்லையென்றால், துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுப் பிடிக்க நேரிடும் என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, நிலம்பா சின்ஹாகா தனது துப்பாக்கியைக் கீழே போட்ட நிலையில், அவரை சக வீரர்கள் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நிலம்பா சின்ஹா கடந்த 2 நாட்களாக கடும் மன உலைச்சலில் இருந்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நிலம்பா சின்ஹாகாவிடம், ராணுவ உயர் அதிகாரிகள் தீவிரமாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.