“காப்பாத்துங்க சார் நாங்க புள்ள குட்டிகாரர்கள்” என்று கொரோனா பற்றி சட்டசபையில் துரைமுருகன் பேசியதால், கடும் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த 9 ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், கொரோனா வைரஸ் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “கொரோனா பயம் இப்போது அதிகமாக இருக்கிறது. போன் எடுத்தாலே, இருமி இருமி கொரோனா என்கிறார்கள்.

சட்டமன்றத்தின் வெளியே, பொது இடங்களில் என எங்கு பார்த்தாலும் கொரோனா நடவடிக்கை உள்ளதால், கொரோனா பயம் எங்களுக்கும் வந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் கொரோனா இல்லை இல்லை என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.

ஏசி அறையிலிருந்தால், கொரோனோ மேலும் பரவும் என்கிறார்கள். அதனால், நாங்கள் பயத்துடன் இருக்கிறோம்.

காப்பாத்துங்க சார், நாங்கெல்லாம் புள்ள குட்டிகாரர்கள். உறுப்பினர்களுக்கு எதாவது ஒன்று ஆனால், இடைதேர்லை எதிர்கொள்வது மிக சிரமம்” என்று கூறிய வேகத்தில், அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

அனைவரும் சிரித்துக்கொண்டு இருக்கும்போது இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா வைரஸ் குறித்து, யாரும் அச்சப்படத் தேவையில்லை. 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார் போல?” என்று கூறியதும், அவையில் மீண்டும் கலகல என சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ”உங்களுக்கு வயது அதிகமா இருந்தால்கூட, நீங்கள் அச்சப்பட வேண்டாம். அதற்கு உரிய சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார். இப்போது, லேசான சிரிப்பலை எழுந்தது.

பின்னர், இது குறித்துப் பேசிய சபாநாயகர் தனபால், “சட்டப்பேரவையில் ஏசி அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும், கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சட்டப்பேரவைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இனியும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சபாநாயகர் கூறினார்.