9 மாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்த நகரைச் சேர்ந்ததினேஷ் குமார் - சுஷ்மிதா தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, 21 வயதான சுஷ்மிதா கருவுற்ற நிலையில், அவருக்கு 9 வது மாதம் தற்போது நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ளதோட்டத்தில் அவர் இன்று மர்ம மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த கூம்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சடலமாக மீட்கப்பட்ட சுஷ்மிதா அருகில் அவருடைய செல்போனும், திறந்து பார்க்கப்பட்ட நிலையில் அவர் பயன்படுத்திய பர்ஸ்சும், சில பழங்களும், 2 காலி வாட்டர் பாட்டில்களும் அருகிலேயே கிடந்துள்ளன. இவற்றையும் கைப்பற்றிய போலீசார், சுஷ்மிதா மர்ம மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.