மறுமணத்துக்கு வற்புறுத்திய அம்மாவை மகள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஹரிநகரைச் சேர்ந்த 47 வயதான நீரு பஹா, அங்குள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை விட்டுப் பிரிந்து, தனது அம்மா சந்தோஷ் பஹாவுடன் வசித்து வந்தார்.

இதனிடையே தனது மகள், மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழாததை நினைத்தும், அவளது பொறுமையின்மையை நினைத்தும், தினமும் மகள் நீரு பஹாவை திட்டி வந்துள்ளார். இதனால், தாய் - மகள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

சம்பவத்தன்று, தனது மகளை மறுமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து தயார் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், தாய் - மகள் இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் கிடந்த இரும்பு கம்பியால் நீரு பஹா, தாயைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், சந்தோஷ் பஹாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, தாயை அடித்து கொலை செய்த நீரு பஹாவை கைது செய்தனர்.

இதனிடையே, டெல்லியில் தாயை, மகளே அடித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.