பள்ளிக்குப் போதையில் வந்த இரண்டு பிளஸ் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, பிளஸ் 2 படிக்கும் 2 மாணவர்கள், வகுப்பறையில் ஆசிரியர் வரத் தாமதம் ஆனதால், கடும் சத்தம் எழுப்பி அரட்டை அடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

மாணவர்களின் கூச்சலிடும் சத்தத்தால், பக்கத்து வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், நேராக வந்து, அரட்டை சத்தம் போட்ட மாணவர்கள் அருகில் வந்து கண்டித்துள்ளார். அப்போது, குறிப்பிட்ட அந்த 2 மாணவர்களும் தள்ளாடிய படிப் பதில் அளித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் இருவரும் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பது, ஆசிரியருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், குறிப்பிட்ட 2 மாணவர்களையும் பரிசோதித்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் மது குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, 2 மாணவர்களின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரையும் 7 நாட்கள் இடை நீக்கம் செய்து, தலைமை ஆசிரியர் நடவடிக்கை மேற்கொண்டார். இதனிடையே, பள்ளி மாணவர்கள் மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.