அடுத்த 3 மாதங்களுக்கு மதுபானம் மீது கொரோனா வரி விதிக்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மதுபான கடைகள் உட்பட அனைத்துவிதமான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதனிடையே, வரும் 31 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கூடுதல் விலையுடன் தமிழகத்தில் முதலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி, புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களைப் புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25 சதவீதம் கொரோனா வரி விதிக்கப்படும் என்றும், புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்திற்கு 20 சதவீதம் கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள், 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 154 மது வகைகள் ஒரே விலைக்கு விற்பனையாக உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறையும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் ஊரடங்கிற்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திலும் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.