இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், இந்தியா உட்பட உலக நாடுகள் யாவும் சீர்குலைந்து காணப்படுகின்றன.

இந்தியா உட்பட உலக நாடுகள் முழுமைக்கும் பரவி உள்ள கொரோனாவால், பொருளாதாரம் எல்லாம் ஆதாள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளதாக என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதனால், இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஆய்வை நடத்துகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன். மாவட்டத்தின் 10 இடங்களிலிருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 31.7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.