சென்னையில் பட்டப்பகலில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மதனந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தன் பள்ளி நாட்களிலிருந்தே, தன்னுடன் படித்த ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, பள்ளி நாட்கள் முடிந்து, கல்லூரியில் தனித் தனியாக அந்த இளைஞர் படித்துக்கொண்டு வந்தாலும், தன் ஒரு தலை காதலை மறக்க முடியாமல், அந்த இளைஞன் கடும் அவதியுற்று வந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுடன் சேர்ந்து, தன்னுடைய ஒரு தலை காதலியைக் கடத்தி, திருமணம் செய்ய, 3 பேரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலையில் கல்லூரிக்குச் சென்ற அந்த இளம் பெண்ணை, ஒரு சொகுசு காரில் வந்த பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து கடத்தி உள்ளனர்.

இதனையடுத்து, சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில், பெண்ணை கடத்திய கார் அதிவேகமாகச் சென்றுள்ளது. அப்போது, சாலையில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக, கார் சிக்கி உள்ளது.

இதனால், அந்த வழியாகச் சென்றவர்கள், காரின் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, இளம் பெண் ஒருவர் அழுதுகொண்டிருக்க, அவரை மற்றவர்கள் பிடித்துவைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு, 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், கடத்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் மத்திய உளவுப் பிரிவு ஆய்வாளரின் மகள் என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், 3 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதித்தனர். அத்துடன், பெண்ணை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதனிடையே, சென்னையில் பட்டப்பகலில் இளம் பெண்ணை பள்ளி மாணவர்கள் சேர்ந்து கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.