இருமலுக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 23 வயதான நித்யா, படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.  

இந்நிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது பெற்றோர்
அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, நித்தியாவை பரிசோதித்த மருத்துவர் சுஜாதா கருணாகரன், இருமலுக்காக ஊசி போட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே, நித்யா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால், அங்கிருந்த மருத்துவர், நித்யாவை வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால், செய்வது புரியாமல் தவித்த அவரது பெற்றோர்கள், அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால் அங்கும் நித்யாவிற்கு சிகிச்சை அளிக்காமல், மீண்டும் வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், சத்தம்போட்டு அழுது தவித்தது, காண்போரை கண்கலங்க வைத்துவிட்டது.

இதனையடுத்து, நித்யாவின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில், தவறான ஊசி போட்டதால் தான், தன் மகள் இறந்துவிட்டதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாகச் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இருமலுக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.