கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதால் ஆத்திரமடைந்த சித்தி, 6 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் திருமலை நகரைச் சேர்ந்த பார்த்திபன், தனியார் நிறுவத்தினத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே சரண்யா என்பவருடன் திருமணம் ஆகி, ராகவி என்ற பெண் குழந்தை இருந்தது. பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு சரண்யா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, சூர்யகலா என்பவரை 2 வதாக திருணம் செய்துகொண்டார். அப்போது, சூர்யகலாவுக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தது.

இந்நிலையில், சூர்யகலா தற்போது கரு உற்றுள்ளார். ஆனால், இதற்குக் கணவர் பார்த்திபன், “ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், 3 வதாக ஒரு குழந்தை வேண்டாம்” என்று கூறி, கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சூர்யகலா, கோபத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல், தனது கணவரின் முதல் மனைவியின் குழந்தையான 6 வயது கொண்ட ராகவி மீது காட்டியுள்ளார்.

சம்பவத்தன்று சிறுமி ராகவி, வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூர்யகலா, கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையை ரோட்டில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, தனது கணவருக்கு போன் செய்து, குழந்தையைக் காணவில்லை என்று கூறியுள்ளார். பின்னர், அவர் வீட்டிற்கு வருவதற்குள், ரோட்டில் விழுந்து கிடந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார், குழந்தை மாடியிலிருந்து விழுந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சித்தி சூர்யகலாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் குழந்தையைத் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். 6 வயது சிறுமியை, சித்தியே கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.