ஆடு மேய்க்கச் சென்ற 9 வயது சிறுமி, மாயமான நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி - ராஜலட்சுமி தம்பதியின் 9 வயது மகள் வசந்த குருலட்சுமி, தனது தங்கையுடன் வீட்டின் அருகே ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

அப்போது, சிறுமி வசந்த குருலட்சுமி, திடீரென்று மாயமாகி உள்ளார். இதனையடுத்து, அக்காவைத் தேடிப் பார்த்த தங்கை, அக்காவைக் காணவில்லை என்று, அவர் மட்டும் வீடு திரும்பி உள்ளார்.

பின்னர், சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் கூறவே, அவர்கள் வசந்த குருலட்சுமியை தேடி உள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காததால், சந்தேகமடைந்த அவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 தனிப் படைகள் அமைத்து, சிறுமியை கடந்த 2 நாட்களாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில், சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே, சிறுமி எப்படி உயிரிழந்தார் என்பதை அறிய முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, விருதுநகர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி மாயமான நிலையில், 2 நாட்கள் கழித்து, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அந்த கிரம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.