உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது, வாகனத்திலிருந்து திடீரென்று டயர் ஒன்று வெடித்துள்ளது. இதில், நிலை தடுமாறிய கார், எதிர்புறம் சாலைக்குச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில், அந்த பக்கமாக வேகமாக வந்த பேருந்தில், நிலைதடுமாறிய கார் சிக்கி உள்ளது. இதில், பேருந்து வந்த வேகத்தில், கார் மீது பயங்கரமாக மோதி உள்ளது.

இதில், கார் தூங்கி வீசப்பட்டு, காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, 2 பெண்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கார் அப்பளம் போல் சுக்கு நூறாக நொறுங்கியது.

மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு குழந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அதன்படி, அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே, விபத்துக்குக் காரணம் என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே. பேருந்து மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.