கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தியா முழுவதும் ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இதனால், அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால், அன்று மாலையே, 7 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை, வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்தது.

இதனையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசும் இன்று மாலை 6 மணி முதல், வரும் 31 ஆம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல், இந்தியா முழுமைக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜார்கண்ட், நாகலாந்து, கேரளா, பீகார், அரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பகுதியளவு தடை உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.