நடிகர் ரஜினிகாந்த், உடல் நிலை குறைவுக் காராணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ‘’ தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் , ‘’ என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...
நான் அரியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்றம் பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்துலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.
நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!! “ என்று தெரிவித்து உள்ளார்.