பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வரும் குமார் என்பவரின் ஆட்டோவில் அமித் குமார் என்பவர் பயணம் செய்துள்ளார். அமித் குமார் எட்கா மைதானத்திற்கு அருகே இறங்கியுள்ளார். அதன்பிறகு குமார் என்பவரின் ஆட்டோவில் மற்றொரு பயணி பயணம் செய்துள்ளார்.


அப்போது ஆட்டோவின் பின்புறத்தில் பை ஒன்றில் அதிக பணம் இருந்ததை கண்ட அந்த பயணி டிரைவரிடம் கூறியுள்ளார். இதற்கு முன் பயணித்த அமித் குமாரின் பணமாக தான் இருக்க கூடும் என்றும் அவர் தான் மறந்துபோய் பணத்தை விட்டு சென்றிருக்க கூடும் என்பதை புரிந்துக்கொண்ட டிரைவர் குமார் , உடனடியாக அமித் குமாரை இறக்கிவிட்ட இடத்துக்கு ஆட்டோவில் திரும்பச் சென்றுள்ளார்.

அமித் குமார் ஆட்டோவிலிருந்து இறங்கியது ஒரு கடைக்குள் செல்வதை கவனித்திருந்த டிரைவர் குமார், அந்த கடைக்கு சென்று அவரின் போன் நம்பரை பெற்று இருக்கிறார். அதன்பின்பு, தான் இருக்கும் இடத்தை பற்றி கூறி, அமித் குமாரை வர வைத்திருக்கிறார் டிரைவர் குமார்.
அந்த இடத்துக்கு போலீசாருடன் வந்த அமித், டிரைவரிடமிருந்த பணப் பையை பெற்றுக்கொண்டு, பையில் இருந்த 2.6 லட்சம் ரூபாய் பணம் அப்படியே இருப்பதை போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆட்ரோ டிரைவர் குமாரின் நேர்மையை பாராட்டி, பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பாட்டீல், 8000 ரூபாய் வெகுமதியாக வழங்கி கவுரவித்துள்ளார் .