தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நேற்று நடந்தது. இந்த சந்திப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபற்றி இந்த சங்கத்தின் தலைவர் இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் விநியோகஸ்தரால் அதை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான், படங்களை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். 

முதலில் படகு வேண்டும். அதை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, தோல்வி அடைந்துவிட்டால் அதை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். 

இன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T.தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம், பலம். ஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்துவிட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது. 

O.T.T.தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? சிந்திக்க வேண்டும். ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க விரும்புகிறோம். 

இன்று வேண்டுமானால் திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கலாம். காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும். தற்போது திரையரங்க நுழைவு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவீகிதம் கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைகிறது. 

ஆகையால் உள்ளாட்சி வரியை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது என் தீர்மானிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் O.T.T.யில் படத்தைத் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தைத் திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ் தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.