இந்திய திரையுலகில் ஈடு இணையற்ற திரை ஜாம்பவானாக விளங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன்  கடந்த 2009 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகர் இர்பான் கான் கதாநாயகனாக நடித்த “லக்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தனுஷின் 3, விஷாலின் பூஜை, தளபதி விஜயின் புலி, அஜித் குமாரின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் #NBK107 ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து வரிசையாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது தனது திரைப்பயணத்தில் 13 ஆண்டுகளை கடந்து 14 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 

'' திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது. வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை. எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.'' 

என தெரிவித்துள்ள ஸ்ருதி ஹாசன் ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…


 

 

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)