வரும் ஏப்ரல் 28 ம் தேதி லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரசிகர்களின் அதீத ஆவலுடன் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒருபுறம் படக்குழு படத்திற்கான விளம்பர வேலைக்காக இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருவரும் கலந்து கொண்டு தங்கள் கூட்டணியில் அமைந்த படங்கள் குறித்தும் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். அதில் பொதுவாகவே மணிரத்தினம் படத்தில் சில அருமையான பாடல்கள் பாதி மட்டும் இடம் பெறுவது உங்களுக்கு வருத்தமளிக்கவில்லையா? என்ற கேள்வி ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் கேட்கப்பட்டது,
அதற்கு அவர், “நான் ‘99 சாங்க்ஸ்’ திரைப்படம் பணியாற்றும் போது. நானும் சில பாடல்களை படத்தில் இருந்து நீக்கியுள்ளேன். சில சமயங்களில் அதை செய்தாக வேண்டும். ஏனென்றால் பொதுவாகவே 3 மணி நேரம் படம் பார்க்க ரசிகர்களை உட்கார வைக்க வேண்டும். அதற்காக நாம் கதையை நகர்த்த வேண்டும். அதற்கு இதை செய்ய வேண்டும்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘சோழா சோழா’ பாடல் படத்திலிருந்து முதலில் நீக்கப்பட்டது. நான் முதலில் அதிர்ந்து போனேன். அந்த பாடல் அருமையானது. பின் அவரிடம் பாடலின் 8 பார் படத்தில் சேர்க்கமுடியுமா? என்றேன். அவர் அதற்கு மறுத்தார். பின் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து அந்த பாடல் படத்தில் எங்கு சேர வேண்டும் என்று ஒரு தீர்வை கண்டோம்.
படத்தில் ஒரு பாடல் தவறான இடத்தில் வந்தால் மக்கள் படம் பார்பதை நிறுத்திவிட்டு எழுந்திருப்பார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை படம் ஹிட்டாக படத்தில் இசை மட்டும அதை செய்யாது. அது பயனற்றது, அது படத்திற்காற சரியான நோக்கத்தை நிறைவேற்றாது, எனவே எதை விட்டுக்கொடுக்க வேண்டும் எதை தியாகம் செய்ய வேண்டும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.” என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘சோழா சோழா’ பாடல் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஆனால் படத்தில் அந்த பாடல் பாதி மட்டும் தான் இடம் பெற்றது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் பாடல் இடம் பெற்ற பகுதி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் ஏ ஆர் ரகுமான் மணி ரத்னம் இருவரும் தங்கள் திரை அனுபவங்களை பகிர்ந்த சுவாரஸ்யமான முழு நேர்காணல் இதோ..