"ராஜன் வகையறா"க்கு என்ன ஆச்சு? எப்போ வரும்?- வெற்றிமாறனின் அதிரடி படைப்பு குறித்து மனம் திறந்து பேசிய அமீர்... சுவாரஸ்யமான வீடியோ இதோ!

இயக்குனர் வெற்றிமாறனின் ராஜன் வகையறா குறித்து பேசிய அமீர்,Ameer about vetrimaaran in rajan vagaiyara | Galatta

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என தனது ஒவ்வொரு படைப்புகளாலும் மக்களின் மனதிற்குள் நின்று பேசிய இயக்குனர் அமீர் தொடர்ந்து யோகி படத்தில் இருந்து நடிகராக களமிறங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்க இருக்கிறார். வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எவ்வளவு காத்திருக்கிறார்களோ அதே போல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “ராஜன் வகையறா” எனும் படம் அல்லது வெப் சீரிஸ் அமீரை கதையின் நாயகனாக வைத்து விரைவில் வெளிவரும் எனவும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

இயக்குனர் & நடிகர் என தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் அமீர் அவர்கள் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் மாயவலை. இந்த மாயவலை திரைப்படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்திலேயே அமீர் நடித்திருக்கிறார். மாயவலை படத்தின் போஸ்டரில் இருந்து எல்லாவற்றிலும் "ராஜன் IS BACK" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த இயக்குனர் அமீர் அவர்களிடம், “இந்த ராஜன் கதாபாத்திரம் குறித்து பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டது, அந்த வகையில், “இந்த மாயவலை படத்தின் ராஜன், வடசென்னை படத்தின் ராஜன் கதாபாத்திரத்துடைய தொடர்ச்சியா?” என அவரிடம் கேட்டபோது, "இதை தொடர்ச்சி என்று சொல்ல முடியாது அதே ராஜன் கதாபாத்திரம் வேறு ஒரு வாழ்வியல் சூழலில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஒரு கற்பனையான கதைக்களம் தான்" என பதில் அளித்தார். 

தொடர்ந்து அவரிடம், “சமீபத்தில் ஒரு பேட்டியில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் கூட கூறியிருந்தார், ராஜன் வகையறா என தனியாக ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் வடசென்னை 2-வை எடுப்பதற்கு பதிலாக இதை எடுப்பதற்கு அவர் (வெற்றிமாறன்) இன்னும் ஆர்வமாக இருக்கிறார்  என்றெல்லாம் தெரிவித்திருந்தார்” எனக் கேட்டபோது, “அதற்கும் இதற்கும் தொடர்பே கிடையாது. அந்த ராஜன் வகையறா வரும்போது அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். உருவ அமைப்பாக இருக்கட்டும், என்னை சுற்றி இருக்கக்கூடிய நடிகர்களாக இருக்கட்டும், அவர்களது கதாபாத்திரங்களாக இருக்கட்டும், அந்த வாழ்வியல் சூழல் நடக்கிற இடமாக இருக்கட்டும் எல்லாமே மாறுபட்டிருக்கும். வரும்போது நிச்சயமாக உங்களுக்கு அப்படி தோன்றாது.” என்றார். தொடர்ந்து அவரிடம் "ராஜன் வகையறா படம் எடுத்து முடிந்து விட்டதா?" எனக் கேட்டபோது, “பாதி இருக்கிறது என்று நினைக்கிறேன் அப்போதே எடுத்து விட்டார். பாதி இருக்கிறது அதை பிறகு தனுஷ் அவர்களின் வுண்டர்பார் தயாரிப்பிலேயே செய்வதாக இருந்தது. பின்னர் இல்லை வேண்டாம் என ஒரு OTT தளத்திற்கு பண்ணலாம் என இருந்தது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்று நினைக்கிறேன் சரியாக எந்த தளம் என்று தெரியவில்லை. அப்படி பேசி வைத்திருந்தார்(வெற்றிமாறன்). அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து அவருடைய படங்கள் வந்துவிட்டது விடுதலை 1 & 2 அடுத்து வாடிவாசல் என இப்படியே போய்க் கொண்டிருப்பதால் ராஜன் வகையறா மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீர் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.