இன்று (செப் 9) காலை 10 மணிக்கு, திமுகவின் பொதுக்குழு கூட்டம் துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக, அனைவரும் நேரடியாக ஒரே இடத்தில் கூட முடியாத நிலை இருந்துவந்தது. ஆகையால் இந்தக் கூட்டத்தை காணொலி வாயிலாக அக்கட்சியினர் இன்று நடத்தினர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பேர் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு ஆகியோா் மட்டுமே மனு அளித்தனா். இதனால், இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வான டி ஆர் பாலுவுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்ட அறிவிப்பும் பொதுக்குழுவில் வெளியிடப்பட்டது.

பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகனின் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் அவர்களை பொதுச் செயலாளராக்க 218 பேர் முன் மொழிந்தும் வழிமொழிந்துமுள்ளனர். வேறு யாரும் பொதுச் செயலாளர் பதவிக்கு மனு செய்யாததால், திரு துரைமுருகன் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிக்கிறேன்” என்று ஸ்டாலின் அறிவித்ததும் மேடையில் இருந்த அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகளும் சென்று, மேடைக்குப் பின்னால் இருக்கும் அறையில் இருந்த துரைமுருகனை அழைத்து வந்தனர். அவரை ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

இதேபோல பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவை தவிர யாரும் மனு செய்யாத நிலையில் பாலுவின் மனுவை 125 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்துமுள்ளனர். டி.ஆர்.பாலு பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்று ஸ்டாலின் அறிவிக்க, அதேபோல டி.ஆர்.பாலுவையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேடைக்கு அழைத்து வந்தனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானமாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் - பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும்; துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டத்தை காணொலி வாயிலாக இணைத்திருக்கிறது தி.மு.க.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இருந்துதான், கூட்டம் விரிவுப்படுத்தப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டத்தில் நேரடியாக கலந்துக் கொண்ட அனைவருக்கும் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சானிடைசரால் கையை சுத்தமாக்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மாஸ்க் அணிந்துகொண்டு சமூக இடைவெளியுடன் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட அமைப்பு சார்பிலும் ஒவ்வொரு அரங்கத்தில் பொதுக்குழு நடந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவாலாயத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் - துணை பொதுச்செயலாளர் - பொருளாளர் ஆகிய பதவிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேரிடர் காலத்திலும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு, மருத்துக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு, முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆகிய தீர்ப்புகளை திமுக வரவேற்றுள்ளது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் சமூக நீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது.தனிப் பெரும்பான்மை பலத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக, மத்திய அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்றும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் திமுகவை ஆட்சி பீடம் ஏற்றி, ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்திட தொண்டர்கள் சூளுரை ஏற்போம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

இவற்றைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்,

``துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக் உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு. மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி,. 3 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என கருணாநிதி குறிப்பிடுவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை.

ஆ.ராசா 5 முறை எம்.பி. பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்க கூடியவர்கள். கட்சியின் வளர்ச்சிக்கு தங்களது மொத்த திறமையும் பயன்படுத்துங்கள்"

என்றார் அவர்