பாலியல் தொழிலுக்குக் கடத்தப்பட்ட 14 வயது சிறுமி மீட்பு!
By Aruvi | Galatta | 02:33 PM
சென்னையில் பாலியல் தொழிலுக்காக காரில் கடத்தப்பட்ட 14 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்று, அங்கு நின்றுள்ளது. காருக்குள், 14 வயது சிறுமியும், அவருடைய ஆண் நண்பர் பைசல், அவரது நண்பர் பிரகாஷ் ஆகிய இருவரும் உடன் இருந்துள்ளனர்.
அப்போது, அந்த சிறுமியின் உறவுக்காரர் சீனிவாசன், அந்த வழியாக வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, எதார்த்தமாக அந்த காரை கவனித்தபோது, காரில் தன் உறவுக்கார சிறுமி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, அந்த சிறுமியிடம், “இங்கு ஏன் வந்தாய்?” என்று கேட்டபோது, பிரகாஷ், மற்றும் பைசல் ஆகிய இருவரும் “பணம் கொடுத்து பாலியல் தொழிலுக்காக அழைத்துச் செல்வதாக” கூறி உள்ளனர்.
இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், சிறுமியை மீட்கப் போராடி உள்ளார். அப்போது, பிரகாஷ், மற்றும் பைசல் ஆகிய இருவரும் சீனிவாசனுடன் மல்லுக்கட்டி உள்ளனர். அந்த நேரத்தில் அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர். இதனைப்பார்த்த பைசல் தப்பி ஓடிய நிலையில், பிரகாஷை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, போலீசாரிடம் நடந்ததைக் கூறி, சீனிவாசன் தன் உறவுக்கார சிறுமியை மீட்டுள்ளார். அத்துடன், சிறுமியைக் கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பிரகாஷிடம், தப்பி ஓடிய பைசல் குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் பாலியல் தொழிலுக்காக 14 வயது சிறுமி காரில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.