பசிக்கும்ல.. திருடப்போன இடத்தில் சமைத்து சாப்பிட்ட திருடன்!
By Arul Valan Arasu | Galatta | September 04, 2019 12:12 PM IST
திருடப்போன வீட்டில் திருடன் சாவகாசமாகச் சமைத்து சாப்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சென்னாம்பேட்டை தக்கடி தெருவைச் சேர்ந்தவர் ஃபாரூக். தொழிலதிபரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனைத் தெரிந்துகொண்ட திருடர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த பல லட்ச மதிப்பிலான தங்க நகைகள், வீட்டிலிருந்த டிவி மற்றும் இருசக்கர வாகனம் எனக் கையில் கிடைத்தவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டனர்.
அத்துடன், திருடிச் சோர்வடைந்த அவர்கள், சமையல் அறைக்குச் சென்று மக்ரூனி சமைத்து சாப்பிட்டுவிட்டு சாவகாசமாகச் சென்றுள்ளனர்.
இதனிடையே, ஃபாருக் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்கையில், திருடர்கள் சாவகாசமாகத் திருடிவிட்டுச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதனிடையே, திருடர்கள் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.