திமுகவின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்!
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 13:45 PM IST
தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வில் தொடக்கம் முதல் முக்கிய பதவிகளிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பி.எஸ் அணி - சசிகலா அணி என்று அதிமுக 2 ஆகப் பிரிந்தபோது, சசிகலாவுக்கு ஆதரவு அளித்து, அமமுக வில் இணைந்தார்.
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அமமுக வில் டிடிவி தினகரனால் மேலும் வளர்த்துவிடப்பட்டார். சமீபத்தில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், படுதோல்வியைத் தழுவினார். தேர்தலுக்குப் பிறகு தங்க தமிழ்ச்செல்வனுக்கும் - தினகரனுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், கட்சியில் புதிதாக இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று முறைப்படி வெளியிட்டார். மேலும் திருச்சி சிவா, ஆ,ராசா உடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராகச் செயல்படுவார் என்று திமுக அறிவித்துள்ளது.