எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் காரணமாக மஹா திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் மீதம் இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போனது. 

சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது...இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி,  தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். 

மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு புறம் கொரோனா முன்கள பணியாளர்கள் கடும் உழைப்பை தந்து, இந்த கொடிய காலத்தில் நம்மை பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். 

மஹா திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்குகொண்ட படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈடுப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநர் U.R. ஜமீல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

இயக்குநர் U.R. ஜமீல் மீது பெரும் நம்பிக்கை வைத்து இப்படத்தை முழுதாக தாங்கிய தூண்களான தயாரிப்பாளர்கள் மதியழகன் அவர்கள், தத்தோ அப்துல் மாலிக் அவர்கள், முகம்மது ஜுபையர் அவர்கள் மற்றும் ராசிக் அஹமத் அவர்கள் அனைவருக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரமாக பங்கு கொள்ள ஒப்புக்கொண்ட சிம்புவிற்கு பெரும் நன்றி படத்தில் அவரின் பகுதிகளை  ரசிகர்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.