இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அருவம். அதனைத் தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவருகிறது மஹா சமுத்திரம் திரைப்படம். ஏ.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மஹா சமுத்திரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மஹா சமுத்திரம் படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் கதாநாயகர்களாக நடிக்க கதாநாயகிகளாக அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அனு இமானுவேல் நடித்துள்ளனர். வில்லன்களாக ஜெகபதி பாபு மற்றும் கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் நடித்திருக்கும் மஹா சமுத்திரம் திரைப்படம் ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில் நடிகர் சித்தார்த் மஹா சமுத்திரம் திரைப்படத்தின் ருசிகர தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் “இந்தியா திரும்பி விட்டேன்... ஹைதராபாத்துக்கு திரும்பிவிட்டேன்... சமுத்திரம் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துவிட்டேன்…" 
"அனைத்து வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் நன்றி... ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பின் போது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்து வருகிறேன்... இன்னும் சில மாதங்கள் இது கவனமாக இருக்க வேண்டும்... மருத்துவர்களுக்கும் தெரபிஸ்ட்களுக்கும் மிக்க நன்றி…"
"திரையரங்கில் ரசிகர்களோடு படத்தைக் கொண்டாட மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்... விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்... உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ வைத்திருக்கிறது..."
என தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Siddharth (@worldofsiddharth)