இந்திய திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய  நடிப்பின் அரக்கன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் என அனைத்து திரையுலக ரசிகர்களுக்கும் அபிமான நடிகர் ஆவார் பிரகாஷ்ராஜ்.

இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களின்  அடுத்து வெளிவரவிருக்கும் முக்கியமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த மற்றும்  இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் தயாராகும் கேஜிஎப்-2 , ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா , மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று வீட்டில் வழுக்கி விழுந்ததில் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்தார். 

உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக ஹைதராபாத்துக்கு அறுவை சிகிச்சைக்காக சென்ற பிரகாஷ்ராஜ் தற்போது அறுவை சிகிச்சை முடித்து விட்டு முழு உடல் நலத்தோடு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய உடல் நலன் கருதி விசாரித்தவர்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, உடல்நிலை தேறிய உடன் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prakash Raj (@joinprakashraj)