உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்திய திரையுலகின் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் குணமாகி வீடு திரும்பிய நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அண்மையில் குணமாகி அமிதாப்பச்சனும் வீடு திரும்பினார். 

இந்நிலையில் இன்று அபிஷேக் பச்சனும் கொரோனாவை வென்றுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று பிற்பகல் எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

கொரோனாவை நான் வெல்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். எனக்காகவும் என்னுடைய குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும் என்னை கவனித்துக் கொண்ட நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2000-ம் ஆண்டில் ரெபியூஜி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிஷேக் பச்சன். 20 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் இவர், கடைசியாக ப்ரீத் : இன்டு தி ஷாடோஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார். இவர் கைவசம் லுடோ, தி பிக் புல், பாப் விஸ்வாஸ் போன்ற படங்கள் உள்ளது.