தமிழகம் இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளை, மத்திய அரசு பறித்தது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என்று சீமான் பகிரங்கமாகக்  
குற்றம்சாட்டி உள்ளார். 

இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று பரவலால், இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற மாநிலமாகத் தமிழகம் 2 வது இடத்திலிருக்கிற வேளையில், நோய்த்தொற்று குறித்து சோதனை செய்யச் சீனாவிலிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்த 4 இலட்சம் வெகுவிரைவுக் கருவிகளை (Rapid Testing Kit) மத்திய அரசு, இடைமறித்து தன் வசப்படுத்தியிருப்பது எதனாலும் சகிக்க முடியாத தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். 

Seeman questions coronavirus testing kits India govt

“பாஜக அரசு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாகத் தமிழின விரோத நடவடிக்கைகளை, தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் பணிகளைத் திட்டமிட்டுச் செய்துவருவதாக” குறிப்பிட்ட சீமான், “துயர் சூழ்ந்த இந்த பேரிடர் காலத்தில் கூட மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கி தனது தமிழின விரோத போக்கினை தொடர்ச்சியாக மத்திய அரசு வெளிக்காட்டி வருவது” கவலை அளிப்பதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

“இந்நிலையில் கொரோனா நோய் தொற்றினை உடனே பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிக்க வல்ல கருவிகளை மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்து பெற்றுக்கொள்வதற்குத் தடைவிதித்து, தமிழக அரசு கருவிகளை வாங்குவதற்கான பணிகளை முன்கூட்டியே செய்திருந்தாலும், அதில் இடைமறித்து அக்கருவிகளைப் பறித்துக்கொண்டு அதனை மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறுவது, தமிழர்களின் நலனுக்கெதிரான மாபாதகச் செயல்” என்றும் சீமான் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“ஒட்டுமொத்த நாடே மிகப்பெரும் பேரிடரில் சிக்கி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற வேளையில், தங்களது மண்ணின் மக்களைத் தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அச்சூழலில் மனிதத்தைப் பாராமல், மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு உயிர்காக்கும் பொறுப்பை செய்யவிடாது இடையூறு செய்யும் மத்திய அரசின் செயல், கொடுங்கோன்மையானது. குறிப்பாக தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரசினை ஆளுகின்ற பாஜக முழுமூச்சாக செயல்பட்டு தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிதி உள்ளிட்ட அனைத்து நலன்களையும் முடக்கிப் போடுவது என்பது சகிக்க முடியாத சர்வாதிகாரத் தனம். கூட்டாட்சித் தத்துவத்தின்பால் வரையறுக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட இந்நாட்டில் பேரிடர் காலத்தில் அண்டை நாடுகளிலிருந்து உயிர்காக்கும் கருவிகளையும், சோதனைச் சாதனங்களையும் வாங்கக் கூட மத்திய அரசை சார்ந்தே இருக்க நிர்ப்பந்திப்பது, தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தன் அடிமையாக கருதுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது” என்றும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

Seeman questions coronavirus testing kits India govt

“கொரோனா நோய்த்தொற்றால் அதிகப்படியான இழப்புகளைத் தமிழகம் தத்தளித்து நிற்கையில், தமிழக அரசு கேட்ட 9,000 கோடி ரூபாய் நிதியைத் தராது வெறுமனே 517 கோடி ரூபாயை அளித்து வஞ்சித்த மத்தியில் ஆளும் மோடி அரசு, தற்போது தமிழக அரசின் நிதியில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களைப் பறித்து அதனை மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தருகிறது. செத்தால் கூட தமிழனுக்கு என நாதி கிடையாது என்கிற மனப்பாங்கில் மத்திய அரசு இந்தப் பேரிடர் காலத்திலும் செயல்படுவது என்பது நோய்த்தொற்று பேரிடர் தருகிற துயரை விட கொடும் துயராக இருக்கிறது” என்றும் கடும் வேதனை தெரிவித்துள்ளார்.

“பன்னெடுங்காலமாக தமிழகத்தின் அபரிமிதமான வரிவருவாய் மூலமாக நிதியாதாரத்தைப் பெற்று வரும் மத்திய அரசு, தமிழகத்திற்குரிய உரிமைகளைப் பறித்தும், மறுத்தும் வருவதோடு மட்டுமல்லாது, அழிவுக்காலத்தில்கூட மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி வருவது தமிழர்களுக்கெதிராகத் திட்டமிட்டு செயல்படும் இன விரோதப்போக்காகும். மாந்தகுலத்தின் உயிரைக்காக்கும் மகத்தானப் பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டு இப்போரில் களத்தில் நிற்கும் தமிழர்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கிற இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றும் வன்மையாக சாடியுள்ளார்.

“தமிழர்களின் உணர்வினை மதித்து அவர்களின் உயிர் காக்கும் அவசியம் எழுந்திருக்கிற இந்த பேரிடர் காலத்தில் கொரோனோ நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கும், தற்காத்துக் கொள்வதற்குமான நோய் கண்டறியும் சாதனங்களை வெளி நாடுகளிலிருந்து வாங்குவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டுமெனவும், தமிழகத்திற்குரிய சாதனங்களை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், தமிழக அரசு கேட்ட உரிய பேரிடர் கால நிதியை எவ்வித காலதாமதமின்றி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தொடர்ச்சியாகத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கினை, உளமார்ந்து உணர்ந்து வருகிற தமிழின இளையோர் இந்தியா என்கின்ற பெருநாட்டின் மீது கொண்டிருக்கிற மாசற்ற பற்றினை இழந்து வருகிறார்கள் என்பதனையும், இப்படிப்பட்ட அவநம்பிக்கை உளவியலுக்குத் தமிழின இளையோரை மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு வலுக்கட்டாயமாக உட்படுத்துகிறது என்பதனையும் இந்த சமயத்தில் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறேன்” என்றும் சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.