“உலகில் நடக்காத ஒன்றையா பாஜகவின் கே.டி. ராகவன் செய்து விட்டார்?” என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மாநில  பொதுச் செயலாளராக இருந்த கே.டி.  ராகவனுக்கு எதிராக பாலியல் புகார் எழுந்து, அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி கடும் அதிர்ச்சியை கிளப்பியது. 

இதனையடுத்து, பாஜகவின் மாநிலச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், பதவி விலகினார். பின்னர், இந்த விவகாரத்தால் ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், “இந்த விவகாரம் சமூக குப்பை என்றும், வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும்” என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கே.டி.  ராகவன் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “இது ஒரு சமூக குப்பை என்றும், ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பது தான் சமூக அவலம்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்றும், இந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும்” என்றும், சீமான் கூறினார்.

அத்துடன், “சட்டப் பேரவையிலேயே ஆபாசப் படம் பார்த்துள்ளனர். அத்தையெல்லாம்தான் தவறு என்றும், அதை விட்டு விட்டு, அவர் தனது அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது கேடுகெட்ட சமுகம் ஆகிவிட்டதோ என எண்ண தோன்றுகிறது” என்றும், அவர் சாடி உள்ளார்.

“யார் யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, அதைப் பதிவு செய்வது வெளியிடுவது முற்றிலும் தவறு” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “நாம் பேசுவதற்கு இன்னும் எவ்வளவோ விசயம் உள்ளது. 6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு ஒத்திக்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்த தர்க்கமும் இல்லாமல் 36 சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாகத் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார். இது கொடுங்கோண்மையின் உச்சம். இது போன்ற விவகாரங்களைத் தான் நாம் பேச வேண்டும்” என்றும், சீமான் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, சீமான் பேசியது குறித்து, “பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒரு முறை சீமான் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விமர்சித்து உள்ளார்.