தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் தொடர்ந்து புதிய புதிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதன் படி, கடந்த ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றும் பெண் செய்தியாளர்களை விமர்சனம் செய்தார். இது தொடர்பாகப் பெண் செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, எஸ்.வி.சேகர் சில காலம் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு “அதிமுக கட்சியின் கொடியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும்” என்று நடிகர் எஸ்.வி. சேகர் பேசி புதிய சர்ச்சையில் சிக்கினார்.

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, செய்தியாளர் ஒருவர் நடிகர் எஸ்.வி சேகர் கூறிய சர்ச்சைக்குரிய விசயம் பற்றி கருத்துக் கேட்டார்.

அப்போது, பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நடிகர் எஸ்.வி சேகர் எல்லாம் ஒரு அரசியல்வாதியே கிடையாது. அவர் வாயில் வருவதை எல்லாம் ஔறி கொட்டுவார். வழக்கு என்று வந்து விட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்” என்றும், பதில் அளித்தார். 

நடிகர் எஸ்.வி சேகர் பற்றி முதலமைச்சர் பழனிசாமி பேசிய இந்த விமர்சனம், இணையத்தில் பெரும் வைரலானது. இது, இணையத்தில் விவாத பொருளாக மாறிய நிலையில், பலரும் நடிகர் எஸ்.வி சேகர் பற்றி முதலமைச்சர் பழனிசாமி பேசிய கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். 

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் எஸ்.வி. சேகர், மீண்டும் முதலமைச்சரைச் சீண்டிப் பார்க்கும் விதமாகப் பேசி, புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது, சமீப காலமாகத் தமிழ்நாட்டின் சில இடங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. 

இந்த சம்பத்தைத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி வன்மையாகக் கண்டித்தார். அத்துடன், “காவிச்சாயம் பூசி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்த, பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி சேகர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைத் தான், ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏற்றப்போகிறாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து நடிகர் எஸ்.வி சேகருக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் எஸ்.வி. சேகரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். “சிறை செல்வது தான், எஸ்.வி சேகர், விருப்பம் என்றால், அதை அரசு நிறைவேற்றும்” என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் எஸ்.வி சேகர், துளிகூட கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் கலங்காத அவர், இது தொடர்பாக எதிர் கருத்துக்களைக் கவனித்துக்கொண்டே இருந்தார்.

இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், நடிகர் எஸ்.வி சேகர் பேசியது தொடர்பாகச் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.  

அந்த புகாரில், “நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கலகத்தைத் தூண்டும் வகையில் பேசியதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், நடிகர் எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது ஆகலாம் என்ற சூழலும் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.