தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பங்கேற்றார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது கொரோனா காலத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு நடவடிக்கை பற்றியும் தெளிவாக விவரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ``புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்படும். நகரும் நியாய விலைக்கடைகள் தமிழகம் முழுக்க திறக்கப்பட்டு சிறப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக அளவுக்கு காய்ச்சல் கிளினிக்குகள் திறக்கப்பட்டு, உடனுக்குடன் நோயாளிகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நோய் குணமடைவதற்காக தடுப்பூசி கண்டறிந்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதற்கு முன்னராக, பீகார் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இன்று தெரிவித்து இருந்தது. தேர்தல் அறிக்கையில் இதைச் சொல்லி வாக்கு கேட்கும் அளவுக்கு ஒரு கட்சி போகக்கூடாது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைவருக்கும் கொரோனா தடுப்புச் இலவசம் என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மத்திய அரசு, மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும். மாநில அரசு தான் அதை இலவசமாக போடவேண்டுமா, பணம் வாங்கி வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகி மால்வியா தெரிவித்து இருந்தார் . ஆனால் தமிழக அரசு இப்போதே இப்படி ஒரு இன்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், ஒரு கொரோனா தடுப்பூசிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை செலவாகும். இது சமானியர்களுக்கு பெரும் சுமையாகும். ஏனெனில் ஒரு ஊசி 5000 என்றால், ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ஊசி போட்டாலே ரூ.20,000 ஆகிவிடும். இந்த நிலையில்தான் முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்