தமிழகத்தில் பொதுமக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர் 22 ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும், ஏழை, எளியோருக்கு கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், தான் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்து. ஏற்கெனவே அவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் இருப்பதால், கொரோனா உறுதியாகியிருந்த தகவல், அவரின் ஆதரவாளர்களுக்கு, வேதனை தந்தது. இந்த தகவல் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அதிலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து விஜயகாந்துக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் அந்த நேரத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மாற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து தேமுதிக கட்சித் தலைமைக்கழகம் முதலில் வெளியிட்ட அறிக்கையில், ``கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நடத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்துக்கு பாதிப்பு உறுதியாகி, மூன்று நாள்கள் ஆகிய நிலையில், அக்டோபர் 2 மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

``கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் 2 பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்"

மருத்துவமனை அறிவித்ததை போலவே, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் அன்று மாலையே வீடு திரும்பினர்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக வீடு திரும்பிய விஜயகாந்த், நேற்று இரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில், `விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை தரப்பில் தெளிவான அறிக்கை வெளியானதாக தெரியவில்லை.

இதனால் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து, அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் கவலை கொண்டிருக்கிறார்கள். அவர் விரைவில் குணமாக பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.