தமிழகத்தில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் கொரோனா சோதனை! பாதிப்பு 738 பேர்..
By Aruvi | Galatta | 02:27 PM
தமிழகத்தில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்திலிருந்து கடந்த 9 ஆம் தேதி சென்னைக்கு வந்த 39 மத குருமார்கள், பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ஜமாத்தில் தங்கி மத பிரச்சாரம் செய்து வந்தனர். தற்போது, அவர்கள் அனைவரும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் அனைவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த 3 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில். நேற்று மேலும் ஒரு மருத்துவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழகத்தில் 60 ஆயிரத்து 739 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், 230 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும்” சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் இதுவரை 34 மாவட்டங்களில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்” சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாகவும். தமிழகம் கொரோனா பாதிப்பில் 2 வது கட்டத்திலிருந்து, 3 வது கட்டத்துக்குச் செல்லக் கூடாது என்பதற்காக, அனைவரும் முழுவீச்சில் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தெரிவித்தார்.