உலகளவில் கொரோனாவுக்கு 1,14,208 பேர் பலி! பாதிப்பு 18,52,652
By Aruvi | Galatta | 03:35 PM
உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,14,208 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,652 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உலக வல்லரசான அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிர் பலி 22 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,60,425 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா வரலாற்றில் அனைத்து மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 5258 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அங்கு நேற்று மட்டும் 737 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,612 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இங்கிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 84,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியிலிருந்து மீண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து மருத்துவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் 1,66,831 பேரும், இத்தாலியில் 1,56,363 பேரும், பிரான்ஸில் 1,32,591 பேரும், ஜெர்மனியில் 1,27,854 பேரும், சீனாவில் 82,160 பேரும், ஈரானில் 71,686 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உலகம் முழுவதும் 22,000 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, சவுதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,14,208 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பிலிருந்த உலகம் முழுவதும் இதுவரை 4,23,400 பேர் குணமடைந்துள்ளனர்.