டெல்லியில் நாளுக்கு நாள், காற்று மாசுபாட்டின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதற்கிடையில் மார்புத் தொற்று ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு வருகிறார். சோனியா காந்தி இந்த நோயால் பாதிக்கப்பட காரணமே, டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடுதான் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது காற்று மாசுபாடு மிக மிக மோசமடைந்ததால், சோனியா காந்தியின் உடல்நலனும் மோசமாகி இருக்கிறது.

முன்னராக சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கும் சென்றார். அவருடன் ராகுல்காந்தியும் சென்றிருந்தார். இதனால் செப்டம்பர் 14 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.

இப்படியாக சோனியா காந்திக்கு பல காலமாகவே இதுதொடர்பான பிரச்னை இருந்தாலும், டெல்லியின் காற்று, சோனியா காந்திக்கு சுவாசிப்பதில் பிரச்னையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உடல்நலனை கருத்தில் கொண்டு நாள்பட்ட மார்புத்தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கிக் கொள்ளுமாறு, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் இன்று காலை தகவல் தெரிவித்தன.

மருத்துவர்கள் அறிவித்ததன் தொடர்ச்சியாக, டெல்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்று கட்சி தரப்பில் கூறப்பட்டது. மேலும் இன்று (நவம்பர் 20) பிற்பகலில் டெல்லியிலிருந்து வெளியேறி ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் சோனியா செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு முன் இப்படியொரு முறை பாதிப்பு ஏற்பட்டபோது (கடந்த ஆண்டு ஜனவரி மாதம்), சோனியாகாந்தி கோவாவில் சில நாள்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோவாவில் ஏற்கெனவே தங்கியிருந்தமையால், இம்முறையும் அதையே தேர்ந்தெடுத்திருக்கிறார் சோனியா காந்தி. ஆம், இன்று மதியும் ராகுல் காந்தியுடன் கோவா தலைநகர் பனாஜியை வந்தடைந்தார் சோனியா காந்தி. அடுத்த ஒருசில நாட்களுக்கு அவர் கோவாவில் தங்கியிருந்து தனது உடல்நிலையில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சோனியா காந்திக்கு, மார்புத் தொற்று மட்டுமன்றி டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் ஆஸ்துமாவும் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆகவே அதற்கும் சேர்த்து அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.