10 வகையான கொரோனா வைரஸ்! ஒன்று மட்டுமே உயிரை குடிக்கும்..
By Aruvi | Galatta | Apr 30, 2020, 11:30 am
10 வகையான கொரோனா வைரஸ் இருப்பதாகவும், அதில் ஒரு வகை மட்டுமே உயிரை எடுக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசுக்கு உலகமே அஞ்சி நடுங்குகிறது. சுமார் 204 நாடுகளில் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 31 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா வைரசில் 10 வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஏ2ஏ என்ற ஒரு வகை வைரஸ் மட்டும் தான், உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக, மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 55 நாடுகளிலிருந்து 3 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். அதில், O, A2, A2a, A3, B, B1 என 10 வகையான கொரோனா வைரசுகள் தான், உலகம் முழுவதும் பரவியிருப்பது தெரியவந்திருப்பதாகக் கூறி உள்ளனர்.
குறிப்பாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, ஓ வகை வைரஸ் பரவியிருந்தாலும், அதை தற்போது ஏ2ஏ வைரஸ் பாதிப்பு முந்தியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், மிக குறைந்த நாட்களில் அதிவேகமான பாதிப்பை, இந்த வகையான வைரசுகள் தான் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
முக்கியமாக, ஒரு வகை கொரோனா வைரசுக்குக் கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து, மற்றொரு கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம் தான் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.