நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர்  கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டதில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளன. 

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளவை:

``தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே ஜூன் 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. 

இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கியப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. விமானம், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாததுடன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதலமைச்சர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். 

மேலே விளக்கப்பட்ட கடுமையான சிக்கல்களையும், மாணவர்களின் நல்வாழ்வையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று காலத்தில் நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்படுவதற்கு எதிரான குரல், இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் எதிரொலித்து வருகிறது. அப்படியான ஒன்றாக, சுற்றுசூழல் ஆர்வலரான  கிரெட்டா தன்பர், ``கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மாணவர்களை தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கூறுவது நியாயமற்றது" என்று சில தினங்களுக்கு முன் ட்விட்டர் வழியாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் மில்லியன்கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார் அவர்.

இந்நிலையில் கிரெட்டா தன்பர்க்கின் கருத்தில் பதிலளிக்கப்படாத பல கேள்விகள் எழுந்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ``அவர் ஒரு ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் இந்திய ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகள் தொடர்பாக ஏன் கருத்து தெரிவித்தார் என்பதை அறிய விரும்புகிறேன். மற்ற நாடுகளில் உள்ள மாணவர்களுக்காகவும் அவர் இதே போல் குரல் கொடுத்தாரா? இந்திய மதிப்பீட்டு முறையின் முக்கியத்துவம் பற்றி அவருக்கு தெரியுமா? இந்திய கல்வி முறையை பற்றிய அவரது அணுகுமுறையில், பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன’ என்று கூறியுள்ளார் அமைச்சர்.