“இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன்” என்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலைத் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதும் மிகப் பெரிய இழப்புகளும், பொருதார மந்த நிலையும் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால், இழந்த பொருளாதாரத்தை மீட்டெக்கும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது” என்று, தனது கவலையைத் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“நாட்டு மக்கள் அனைவரும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களை நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூறுகிறேன்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.

“என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் விக்டர் ஹியூகோவின், 'ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால், உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது' என்ற புகழ் பெற்ற தத்துவத்தை நான் அவையில் முன்மொழிந்திருந்தேன்” என்றும், சுட்டிக்காட்டினார்.

“ஆனால், இன்று 30 வருடங்களுக்குப் பிறகு, நாம் கடந்து கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த 3 தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், ஆனால் கொரோனா தொற்று காரணமாக, சமீபமாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன்” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

அதே போல், “இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றும், அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.

“இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றும், ஆனால் இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல” என்றும் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “நாம் ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம் இது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு நம்முடைய முன்னுரிமைகள் தற்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “இந்திய பொருளாதார தாராளமய கொள்கையின் மூலமாக, இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே” இந்த அறிக்கையை மன்மோகன் சிங் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.