மாமியாருடன் சண்டை போட்ட மருமகள் கணவனிடம் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால், மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சரஸ்பூரின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்த 32 வயதான சுரேந்திர சிங், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கீதா என்ற பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

ஆனால், சுரேந்திர சிங்கிற்கு இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு முறைப்படி விவாகரத்தும் நடந்துள்ளது.

அதேபோல், ரயில்வே துறையில் பணியாற்றி வந்த 32 வயதான சுரேந்திர சிங் திருமணம் செய்துகொண்ட கீதாவிற்கு, இது 3 வது திருமணம் ஆகும்.

ஆனாலும், சுரேந்திர சிங் பற்றிய விசயங்களை கீதா மற்றும் கீதாவின் வீட்டாருக்கும்; கீதா பற்றிய விசயங்களைச் சுரேந்திர சிங் மற்றும் அவரது வீட்டாருக்கும் உண்மைகளைச் சொல்லியே திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே தொடங்கி உள்ளது.

ஆனால், அதன் பிறகு, அவர்களது வாழ்க்கையில் தாம்பத்திய உறவில், புயல் காற்று வீசத் தொடங்கி உள்ளது.

அதாவது, திருமணத்திற்குப் பிறகு எல்லோருடைய வீட்டில் நடைபெறுவது போலவே, இவர்களது வீட்டிலும் மாமியார் - மருமகள் சண்டை வந்துள்ளது.

இந்த மாமியார் - மருமகள் சண்டையைக் கணவர் தலையிடாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி கீதா, “ஏன் எனக்கு சாதமாக உங்கள் அம்மாவிடம் பேச வில்லை” என்று கூறி கணவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதில், ஆத்திரமடைந்த மனைவி கீதா, “இனி தாம்பத்திய உறவிற்குக் கணவனை அனுமதிக்கப் போவதில்லை” என்ற சபதம் எடுத்ததாகத் தெரிகிறது. அதன்படி, இரவு உறங்கச் செல்லும் போது, கணவருடன் ஒரே மெத்தையில் தூங்காமல், தனித் தனியாகப் படுக்கைக்குச் சென்றுள்ளனர். 

இப்படியாக, இந்த தாம்பத்திய விரதம் சுமார் 22 மாதங்கள் நீண்டுள்ளது. இடையிடையே, மனைவியைச் சமாதானம் செய்ய கணவன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கடைசி வரையில் மனைவி கீதா எதிலும் சமாதானம் ஆகவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில், கணவனிடம் கோபப்பட்ட மனைவி கீதா, கோபித்துக்கொண்டு கடந்த ஜூலை மாதம் தன் அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனால், தன்னுடைய 2 வது திருமண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டதே என்ற விரக்தியில், வாழ்க்கையை வெறுத்துப்போன கணவன் சுரேந்திர சிங், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

கணவரின் சுரேந்திர சிங் இறப்பு செய்தி கேட்டு அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவருடைய மனைவி கீதா, வந்துள்ளார். அப்போது, உயிரிழந்த சுரேந்திர சிங்கின் உறவினர்கள் கீதாவுடன் சண்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மகன் சுரேந்திர சிங்கின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “என் மகனின் தற்கொலைக்குக் காரணம் அவனுடைய மனைவி கீதா தான்” என்று, தன் மருமகள் மீது புகார் கொடுத்தார். 

இதன் காரணமாக, “கணவனை தற்கொலைக்குத் தூண்டியதற்காக” அவருடைய மனைவி கீதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.