படத்திற்கு படம் தரமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து தனது மிகச்சிறந்த நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் #சூர்யா42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட படைப்பாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் #சூர்யா42 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் நடித்து வரும் சூர்யா, சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சூர்யா, ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் நிறைந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம். 

நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய் பீம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்ததோடு ஆஸ்காருக்கான பரிந்துரை பட்டியலின் முதல் நிலை வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பேசினர். அப்போது படத்தின் இணை தயாரிப்பாளரும், 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் இயக்குனருமான ராஜசேகர் பாண்டியன், “ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திட்டங்கள் இருக்கின்றன. ஜஸ்டிஸ் சந்துரு இது போன்ற பல முக்கியமான வழக்குகளை கையாண்டிருக்கிறார். எனவே கட்டாயமாக இரண்டாம் பாகம் தயாராகும்.” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.