இதுவரை நடிகர் சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் உலகம் முழுக்க அயலான் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. முன்னதாக நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் மிக முக்கிய படமான அயலான் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதே பொங்கல் வெளியிடாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம், நடிகர் தனுஷின் அதிரடி ஆக்சன் படமான கேப்டன் மில்லர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர இருப்பதால் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளிவருவதில் சந்தேகம் இருப்பதாக பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. இதை அதிரடியாக மறுத்த தயாரிப்பு நிறுவனம் 2024 பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஆவது உறுதி என திட்டவட்டமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் அயலான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெளிவர இருப்பதாக புதிய அறிவிப்பு வந்திருக்கிறது. வெளிநாடுகளில் அயலான் திரைப்படத்தை வெளியிடும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், "உலகம் முழுக்க 65க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அயலான் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது." இந்த அதிரடியான அறிவிப்பால் தற்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர் அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அட்டகாசமான ஒரு ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த அயலான் திரைப்படத்தில் 4500க்கும் VFX SHOTகள் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நுணுக்கமான VFX பணிகளுக்காகவே இவ்வளவு காலம் எடுத்துக் கொண்ட படக்குழு மிகவும் கவனத்தோடு பணியாற்றியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய ஹீரோக்களில் ஒருவராகவும் தனக்கென மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக இந்திய சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் முதல் முறை இணையும் சிவகார்த்திகேயன் வரும் 2024 ஆம் ஆண்டில் SK24 படத்தில் நடிக்கிறார்.