‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ போன்ற இந்திய சினிமாவில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் ஹோம்பாளே தயாரிப்பின் அடுத்த படைப்பாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘சலார்’ கேஜிஎஃப் 1,2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிராசாந்த் நீல் உடன் இரண்டாவது முறை கூட்டணி வைத்திருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பிலிருந்தே அதிகரித்து வருகிறது. இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்கிறார் மேலும் சலார் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பார் மாதம் 28ம் தேதி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் அளவு உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. டீசரில் கேஜிஎஃப் படத்துடன் தொடர்பு படுத்தும் வகையில் ஹீரோ பில்டப் வசனங்கள் கிட்டத்தட்ட ‘கேஜிஎஃப்’ பட படப்பிடிப்பு தளம் என கேஜிஎஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. இதையடுத்து கேஜிஎஃப் பட உலகில் சலார் வெளியாகும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் முன்னதாக படக்குழு யாஷ் நடிப்பில் ‘கேஜிஎஃப் 3’ உருவாகும் என்று அறிவிப்பும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் சலார் திரைப்படம் 100 மில்லியன் பாரவையாளர்களை இணையத்தில் பெற்று சாதனை படைத்தது குறித்து படக்குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில், “நன்றியில் திளைத்திருக்கிறோம்! இந்திய சினிமாவின் ஹீரோயிச பிம்பத்திற்கு அடையாளமாக திகழும் சலார் புரட்சியில் ஒன்றிணைந்த உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்... எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்திய திரைப்படமான சலார் டீசரை 100 மில்லியன் பார்வைகளை கடந்து செல்ல வைத்ததற்காக எங்களின் அற்புதமான ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எங்களின் ஆரவாரமான கரவொலி.! உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. இதற்காக உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை வழங்கவிருக்கிறோம்.

இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டத்தை வெளியிட தயாராகும் நிலையில்.. பெரிய விசயங்கள் உங்களுக்காக காத்திருப்பதால்.. ஆகஸ்ட் மாத இறுதியை உங்களின் குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொள்ளவும். மறக்க முடியாத அனுபவத்திற்கும் தயாராகுங்கள். மேலும் புதிய தகவல்களுக்காக காத்திருங்கள். உங்களுக்காக காத்திருக்கும் மகத்துவத்தை காண தயாராக இருங்கள். ஒன்றாக இணைந்து வரலாற்றை உருவாக்கி இந்திய சினிமாவின் சக்தியை கொண்டாடி இந்த உற்சாகமான பயணத்தை தொடர்வோம்.” என்று குறிப்பிட்டு சலார் படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து பிரபாஸ் ரசிகர்கள் இந்த அறிக்கையை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.