இந்திய சினிமாவில் மிக பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரைத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவனாகவும் ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டு இருக்கும் ஆளுமையாகவும் இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் திரைப்படம் வெளியானாலே திருவிழா போல் காட்சியளிக்கும் திரையரங்குகள். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லமல் மற்ற மொழி ரசிகர்களையும் திருப்தியடைய வைக்கும் அளவு அட்டகாசமான கமர்ஷியல் திரைப்படங்களில் நடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் வெளியான வீர சிம்மா ரெட்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘அகண்டா’ திரைப்படம் உலகம் முழுவது வசூல் வேட்டையாடி மிகப்பெரிய சாதனை படைத்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆந்திரா தெலுங்கானாவில் அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அகண்டா திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூல் படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளடக்கிய இப்படத்தை இயக்குனர் போயபதி சீனு இயக்கியிருந்தார். ஏற்கனவே பாலகிருஷ்ணா வுடன் ‘சிம்ஹா’, ‘லெஜன்ட்’ ஆகிய படங்களில் இணைந்த போயபதி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த இந்த திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பார் இசையமைப்பாளர் தமன். அனைத்து பாடல்களும் பின்னணி இசையும் இன்றும் இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடதக்கது. திரையரங்கை தாண்டி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான அகண்டா அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகா சிவராத்திரியான இன்று இசையமைப்பாளர் தமன் அகண்டா திரைப்படத்தின் சிறப்பு காட்சியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதனுடன் கூடிய விரைவில் அகண்டா இரண்டாம் பாகம் வரும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இசையமைப்பாளர் தமனின் பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நிச்சயம் இந்த திரைப்படமும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்